recent posts...

Thursday, March 18, 2010

Kerala Cafe - ப்ரமாதமான அவியல்

மலையாளக் கரையிலிருந்து வரும் படங்களில் பல, யதார்த்த உலகும், யதார்த்த மக்களும், யதார்த்த வசனமும், ஆர்பாட்டமில்லாமல் ரம்யமா அரங்கேற்றப்படும். நம்மாலும் இவ்வகை படங்களை சிரமமே இல்லாமல் உள்வாங்கி, ஆழமா ரசிச்சு ருசிக்க முடியுது.
நான் கண்ட படங்களிலே, மம்முட்டி நடித்த 'தனியார்வதனம்' போல் இதுவரை கண்டதில்லை. தேடிப்பிடித்து வாங்கிய விசிடியை, நேரம் கிட்டும் போதெல்லாம் பார்த்து புளகாங்கிதம் அடைவதுண்டு.

சோகப் படங்கள் ரொம்பவே பிடிக்குது. இந்த வகை படங்கள் பார்க்கும்போது, மனது கனம் ஆவதும், கண்ணின் விளிம்பில் கண்ணீர் எட்டிப் பார்ப்பதும், ஒரு சுகமான அனுபவம்.
தமிழில் சட்டுனு ஞாபகம் வருவது, மகாநதி. ஆங்கிலத்தில், ஜூலியா ராபர்ட்ஸும், சூசன் சாரண்டனும் பட்டையைக் கிளப்பிய Step Mom இவ்வகை.

Kerala Cafe, பத்து இயக்குனர்கள், பத்து இசை அமைப்பாளர்கள், பத்து ஒளி/ஒலிப்பதிவாளர்கள் இணைந்து, பத்து விதமான குட்டிக் கதைகளை தனித் தனியா இயக்கி, மாலையா கோத்து வெளிவந்த படம். ஒவ்வொரு கதைக்கும் பெருசா சம்பந்தம் இல்லைன்னாலும், லேசாக சம்பந்தப்படுத்தி, ஒரு முழுப் படமாக பார்த்து ரசிக்கும்படி செஞ்சிருக்காங்க. Kerala Cafe ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் ஒரு உணவகம். எல்லா கதா பாத்திரங்களும், சும்மா, வந்து போகும் இடம்.
இந்த அவியலில், பத்து காய்களும் அருமை. அதில் எட்டு பட்டையை கிளப்பிய அருமை. ரெண்டு சுமார் ரகம். பட்டையைக் கிளப்பிய ஒரு குட்டிக் கதை, நம்ம ரேவதி இயக்கியதாம்.
நான் மேலே சொன்ன, சோகத்தைப் பிழியும் கதைகள்தான், கிட்டத்தட்ட எல்லாமே.



இந்த மாதிரி கூட்டு முயற்சியெல்லாம் மலையாளக்கரையில் தான் முடியுமோ? அடிக்கடி இந்த மாதிரி எத்தையாவது பண்ணி கலக்கிக்கிட்டே இருக்காங்களே?

பத்தில் என்னை உலுக்கி ஆட்டிய கதைகளை மேலோட்டமா சொல்றேன். படத்தை பாக்கணும்னு நெனைக்கரவங்க, மேலப் படிக்காதீங்க.

Bridge என்று கதை. அன்வர் ரஷீத் என்ற இயக்குனர் எடுத்த குட்டிக் கதை இது. கொட்டும் மழையில், பச்சைப் பசேல் சூழலுக்கு நடுவில் ஒரு குடிசையில் ஆரம்பிக்கிரது கதை. ஒரு சலவைக்காரரின் வீடாம். சுற்றி வெள்ளை வேட்டிகள் கொடிக் கம்பங்களில் காயப் போட்டிருக்காங்க. எல்லாமே, மழையில் நனைந்து, காத்தில் பரக்குது.
ஒரு ரொம்ப வயசான பாட்டி, வீட்டு வாசல்ல நின்னு பாத்திட்டிருக்காங்க. கண்ணும் சரியாத் தெரியலை அவங்களுக்கு. மேலே படத்தில் இடது மூலையில் இருக்கும் பாட்டி.
சலவைக்காரரின் மனைவி, வயதான மாமியாரை கவனித்துக் கொள்ள முடியவில்லைன்னு பொலம்பிக்கிட்டு இருப்பாங்க.
மருமகள் இப்படி நம்மைப் பத்திதான் பொலம்பரா என்ற ப்ரக்ஞையே இல்லாமல், தன் மகனிடம், தன்னை பீச்சுக்குக் கூட்டிட்டுப் போய் காட்டுடான்னு அப்பாவியா கேட்டுக்கிட்டு இருப்பாங்க.
அன்று இரவு, வழக்கம்போல் மருமகள் புலம்பத் தொடங்கி விடுவாள். இந்த வயசான பாட்டியை என்னால கவனிச்சுக்க முடியாது. ஒரு நாளைக்குப் பல தடவை படுக்கையிலேயே எல்லாம் போயிடறாங்க. வேணும்னா, இனி நீங்க சுத்தம் பண்ணி கவனிச்சுக்கோங்கன்னு புருஷனுக்கு டார்ச்சர் கொடுக்கறாங்க.
மறு நாள், சலவைக்காரன், தன் அம்மாவிடம், பீச்சைக் காட்டரேன் வான்னு, தனியா அம்மாவைக் கூட்டிக்கிட்டு போறான்.
ஒரு நாள் மகனும் அம்மாவும் சந்தோஷமா சுத்திட்டிருக்காங்க.
அம்மாக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தரான். அம்மாவை பீச்சுக்கு கூட்டிட்டுப் போறான். அம்மாவுக்கு நல்ல சாப்பாடு வாங்கித் தரான்.
அப்பரமா, ஒரு படத்துக்குக் கூட்டிட்டுப் போறான்.
பட இடைவேளையின் போது, இரும்மா டீ வாங்கிட்டு வரேன்னு, வெளீல வரான்.
கொஞ்ச நேரம் மூலையில நின்னு அழறான்.
அடுத்த பஸ் பிடிச்சு ஊருக்கு திரும்பிடறான், அம்மாவை அம்போன்னு விட்டுட்டு.
அடுத்த நாள், அம்மா, ரயில்வே ஸ்டேஷனில், Kerala Cafeயின் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்.

Anwar - hats off!

'மகள்'னு ஒரு கதை. நம்ம ரேவதி எடுத்தது.
குவாரியின் அருகில் இருக்கும் ஒரு குடிசையில் வாழும் தமிழ் குடும்பம். அம்மா, அப்பா, ஒரு குட்டிப் பொண்ணு, ஒரு குட்டிப் பையன்.
தன் மகளை இன்னொரு பணக்காரக் குடும்பத்துக்கு தத்து கொடுக்க முடிவு பண்றாங்க, அப்பாவும் அம்மாவும்.
அம்மாவுக்கு மனசில்லைன்னாலும், அதன் மூலம் கிட்டும் பணத்தில், மகனை படிக்க வைக்கலாம்னு எண்ணம்.
இதை செஞ்சு தர ஒரு ப்ரோக்கரும் இருக்காரு.
அந்த குட்டிப் பொண்ணு, தன் தாயை பிரிவது புரிந்தாலும், தன்னால், தன் தம்பிக்கும் குடும்பத்துக்கும் விடிவு பிறக்கும்னு ப்ரோக்கர் சொன்னதை கேட்டது, அழாம திடமா இருக்கா.
அந்த நாளும் வருது. பணக்கார தம்பதியர் காரில் வந்து, பொண்ணை எடுத்துட்டுப் போறாங்க.
அம்மா அழுது ஆர்பாட்டம் பண்றாங்க. ஆனா, குட்டிப் பொண்ணு, கலங்காமல், டாட்டா காட்டிக்கிட்டு போரா.
பணக்கார தம்பதியரும், மகளை, 'தங்கம் போல்' கண்ணுல வச்சு பாத்துக்கறேன்னு சொல்லிடறாங்க.
அடுத்த சீனில், Kerala Cafeல் ஒக்காந்துக்கிட்டு இருக்காங்க இந்த பணக்கார தம்பதியர். மடியில், ஆழமான உறக்கத்தில் குட்டிப் பொண்ணு. கையில், தம்பி கொடுத்த மயிலிறகை கெட்டியா புடிச்சுக்கிட்டு இருக்கா.
கணவன் கேட்கிறான், "எழுந்துட மாட்டால்ல?"ன்னு.
மனைவி, "அதெல்லாம் எழுந்துக்க மாட்டா, தூக்க மாத்திரை டோஸ் ஜாஸ்தியா கொடுத்திருக்கேன்"னு சொல்றா.
கொஞ்ச நேரத்தில், ஃபோன் பேசிட்டு ஒரு பாம்பே காரர் வராரு.
கத்தை கத்தையா பணத்தை கொடுத்துட்டு, குட்டிப் பொண்ணை தோளில் தூக்கிக்கிட்டு வெளீல போயி, ஒரு வேனில் ஏறி ஒக்காருவாரு.
குட்டிப் பெண்ணின் கையில் இருந்த மயிலிறகு, கீழே விழுந்து, வேன் டயர் அதன் மேல் ஏறிப் போகும்.

ரேவதி - hats off!

புறம் காழ்ச்சகள், Lal Jose இயக்கிய கதை.
மீண்டும், பச்சைப் பசேல் தேயிலைத் தோட்டமும், நீர் வீழ்ச்சியும், ஈரப் பதமான சாலையும். சாலக்குடி பக்கத்துல எங்கையோ.
ஸ்ரீநிவாசன், டவுன் பஸ்ஸில் பிரயாணம் செய்யறாரு.
மம்முட்டியும் அந்த பஸ்ல ஏறுவாரு. ஏறியது முதல், மம்மூட்டி சிடுமூஞ்சியா இருப்பாரு. எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழுவாரு.
ஒரு காலேஜ் கோஷ்டி பஸ்ஸில் ஜாலியா ரகளைப் பண்ணுவாங்க. அவங்களை பிடிச்சு திட்டுவாரு.
ஒவ்வொரு ஸ்டாப்பிலும், அஞ்சு நிமிஷம் ஓரம் கட்டி, டீ குடிக்கும் டிரைவரையும், நடத்துனரையும் திட்டிக்கிட்டே இருப்பாரு.
தன் வீட்டின் அருகே வந்ததும், பஸ்ஸை நிறுத்தச் சொல்லுவாரு. "இவ்ளோ நேரம் அங்க நிக்காத இங்க நிக்காதன்னு ஞாயம் பேசிக்கிட்டு வந்தியே, உன் வீட்டு பக்கத்துல எல்லாம் நிறுத்த முடியாது, பஸ் ஸ்டாண்டில் நிறுத்தறேன், நடந்து வா"ன்னு நடத்துனர் திருப்பித் திட்டுவாரு.
பஸ்ஸிலிருந்து அவசரமா எறங்கி சாலை ஓரத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு ஓடுவாரு மம்மூட்டி. பெரிய கூட்டமும் ஒப்பாரிச் சத்தமும். ஒரு சவப் பெட்டி அப்போ வந்திறங்கும். ஒரு குட்டிப் பையனின் சவப் பெட்டி.

Lal Jose - Hats off! மம்முட்டி - கலக்கல் சாரே.


இப்படி, கசக்கிப் பிழியும் வகையில் கதைகளுக்கு மத்தியில், வயிற்றைக் கிழித்த ஹாஸ்யமும் ஒன்று இருந்தது.

Happy Journey, Anjali Menon இயக்கியது.
ஜெகதி ஸ்ரீகுமார் (நம்ம ஊரு கவுண்டர் மாதிரி), ஒரு இரவுப் பேருந்தில் ஒக்காந்துக்கிட்டு இருப்பாரு. பஸ்ஸ்டாண்டில், வந்து செல்லும் பெண்களையெல்லாம் கிண்டல் செஞ்சுக்கிட்டு இருப்பாரு.
ஒரு இளம் பெண் ஜெகதியின் இருக்கைக்கு அருகில் வந்தமர்வாள். ஒரு பெரிய பை கொண்டு வந்திருப்பாள்.
ஜெகதியும், வழக்கம் போல், ஈவ் டீஸிங் வேலையை ஆரம்பித்து, ஜொள்ளோ ஜொள்ளென்று ஜொள்ளி, அவளை உரசோ உரசென்று உரசுவார்.
அந்தப் பெண் எரிச்சல் அடைந்தாலும், பொறுத்து கொண்டு ஒரு நாவலை படித்து முடிப்பாள்.
அந்தப் பெண்ணின் செல்பேசியை பிடுங்கி, "என்னம்மா நீ, அந்த காலத்து ஃபோனை வச்சிருக்கியே, என் ஃபோனைப் பாரு, லேட்டஸ்ட்டு"ன்னு சொல்லிக்கிட்டே அந்தப் பொண்ணி படம் பிடிப்பாரு.
கடுப்பாகிப் போவாள் பெண்.
அமைதியா, "ஆமாமாம், பழைய ஃபோன் தான். ஆனா, இந்த ஃபோனால், இந்தப் பஸ்சில் இருக்கும் அனைவரின் தலைவிதியை மாற்றப் போகிறேன்"னு ஒரு பீடிகையா சொல்லுவா.
ஜெகதி ஒரு நிமிஷம் அமைதியாகி, அப்பரம் திகிலாகி, மிரட்சியாக பாப்பாரு.
அந்தப் பொண்ணும், ஒரு 'தீவிரவாதி' கணக்கா, கொஞ்ச நேரம் சீரியசா பேசிக்கிட்டே வருவா.
ஜெகதிக்கு வேர்த்துக் கொட்டும்.
அதற்கு முன், தன் மனைவியை மட்டம் தட்டிப் பேசியவர். தனக்கு ஒரு மனைவியும், ரெண்டு பசங்களும் இருப்பதாகவும் சொல்லி, தன் குடும்ப புராணத்தை சொல்லி புலம்புவாரு.
பஸ் ஸ்டாப்பு வரும், அந்தப் பொண்ணு, தன் பையை எடுத்துக்கிட்டு ஜெகதி டாட்டா காட்டிக்கிட்டே எறங்கிப் போயிடும்.
மகளை அழைத்துச் செல்ல வந்த தந்தை, "என்னம்மா இன்னிக்கு யாரை போட்டு வாட்டி எடுத்த"ன்னு சிரிச்சுக்கிட்டே கேப்பாரு.
Kerala Cafeக்கு வரும் ஜெகதி, அதுக்கப்பரம், பெண்கள் பக்கமே திரும்பி பாக்க மாட்டாரு.

Anjali - hats off!

மற்ற சில குறும் கதைகளும் அருமையா வந்திருக்கு படத்தில்.
Nostalgia - திலீப் ஹீரோ. துபாயில் இருக்கும் NRI. துபாயில் இருக்கும்போது, "ஹ்ம் நம்ம ஊரப் போல வருமான்னு" புலம்புவது. ஊருக்கு விடுமுறையில் வந்ததும், "ச, என்ன ஊரு இது"ன்னு மாத்தி புலம்புவது.
Island Express - ப்ரித்விராஜும் இன்ன பலரும். Alleppey Express விபத்துக்குள்ளாகி பலர் மரணம் அடைவார்கள், அந்த விபத்தால் இணைந்தவர்கள் பலர் சந்தித்துக் கொள்ளும் கதை.
அபிராமம் - கடன் தொல்லையால் தவிக்கும் ஒரு பிசினஸ் மேன். வேறு வழியில்லாமல், தன் மனைவியையும் மகனையும் அவளின் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி விட்டு, தற்கொலை செய்து கொள்ள யத்தனிப்பார். கடைசி நிமிடத்தில், மனைவி திரும்ப வந்துவிடுவார். உங்களை விட்டுப் பிரிய மனசு வரலைங்கன்னு அழுது கொண்டே. இருவரும், கட்டித் தழுவி அழுவாங்க. டச்சிங்.

பாருங்க. கண்டிப்பா பாருங்க.


இனி, எல்லா பதிவிலும், பதிவுக்கேத்த மாதிரி ஒரு நிர்வாணப் படம், நம்ம ஹுசைன் தாத்தா ஸ்டைலில் வரையலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். நம்மளும், பாப்புலர் ஆவணும்ல ;)

11 comments:

Anonymous said...

கண்டிப்பா பாத்துடறேன்

SurveySan said...

ஹுசைன் ஸ்டைலில், பதிவுக்கேத்த படம் இணைக்கப்பட்டுள்ளது. :)

SurveySan said...

@சின்ன அம்மிணி

நன்றீஸ். பாத்துட்டுச் சொல்லுங்க.

Ananya Mahadevan said...

சர்வே,
நான் பார்த்தேன். என் ப்ரையாரிட்டி லிஸ்ட் இதோ
The Bridge-ரொம்ப அதிர்ந்தேன், நீங்க சொல்றது மாதிரி cinematography, டாப்பு!
புரம் காழ்ச்சகள்-கொஞ்சம் எதிர்ப்பார்த்தது தான் என்றாலும் execution தூள்.
மகள்- அதிர்ச்சி, வலி, பிரிவு எல்லாம்! ரேவதி, கலக்கல்ஸ்மே.
அவிராமம்- குடும்பப்பிணைப்பின் முக்கியத்துவம்.
Happy Journey - ஜொள்ளர் ஸ்பெஷல். ஜகதி நானும் அவார்டுக்கு எலிஜிபிள் தான்னு காட்டி இருக்கார்.
Nostalgia- யதார்த்தம்.
Island Express - ரொம்ப ஸ்ட்ராங்கு மலையாளம், எனக்கு புரியலை.கான்செப்டு ஓக்கே.

Off Season- கல கல

பாக்கி ரெண்டும் ரொம்ப சுமார்.


மனதை உலுக்கிய கதைகள். தனித்தனியா படங்கள் எடுத்தாலே சூப்பர். இதுல கம்பைண்டு எஃபர்ட் வேற, கேக்கணுமா?

SurveySan said...

@அநன்யா மஹாதேவன்

glad to see our ரசனைஸ் match. அவிராமமா அபிராமமா? அவிராமம்னா இன்னா?
Island express எனக்கு பெருசா புரீல என்ன சொல்ல வந்தாங்கண்ணு.
அந்த பேய் எப்பிசோடும் பிடிக்கலை. திலகன்&co.

மொத்தத்தில், அம்சம்.
Bridgeம் மகளும் ஹாப்பியும் சூப்பரோ சூப்பர். நிறைய தடவை பார்த்து ரசிக்கலாம் இவைகளை.

மம்முட்டியின் நடிப்புக்காக அந்த புரம் காழ்ச்சகளை பாத்துக்கிட்டே இருக்கலாம். ரெண்டு நிமிஷம் வந்தாலும், என்னமா நிக்கறாரு மனுஷன். 'பன்ச்' சட்டிலா இருந்தது. ஆனாலும், நச்.

ஆ! இதழ்கள் said...

cartoon edho kiruki vachaalum arummaiyathaan iruku, aanaa paavam kadaisi paiyanuku matum yaen nenju vithyasama iruku paavam?

Thamiz Priyan said...

நல்ல அறிமுகம்.. இதோ டாரெண்டை இறக்கியாச்சு.. இனி பதிவிறக்கி பார்த்துட வேண்டியது தான்... :-)

Ananya Mahadevan said...

@Survey,
Viraamam = Rest
Aviraamam =Restlessness

Ananya Mahadevan said...

அந்த ம்ருத்யுஞ்சயம் மொக்கை தான். ஆல்ஸோ, அந்த லலித ஹிரண்மயி.. ஊதிப்போன முகத்துடன் சுரேஷ்கோபி. ரொம்ப கேவலமா இருக்கார் அந்த ஆள். ஷாஜிக்கு இந்த ஆளைவிட்டா வேற ஸ்டார் பிடிக்காதா? செம்ம கடி கதையும்.

SurveySan said...

@அநன்யா மஹாதேவன்

danks!

SurveySan said...

@ஆ! இதழ்கள்

//cartoon edho kiruki vachaalum arummaiyathaan iruku, aanaa paavam kadaisi paiyanuku matum yaen nenju vithyasama iruku paavam?//

இந்த மாதிரி வித்யாசமா எத்தையாவது போட்டாதான், ப்ரச்சனை உண்டாகும், பாப்புலர் ஆக முடியும். :)