recent posts...

Sunday, December 26, 2010

இளையராஜா - பாரதிராஜா - நண்பேன்டா

இயக்குனர்களுக்கான பாராட்டு விழா ஒன்று சன்.டிவியில் ஒளிபரப்பக் கண்டேன். நல்ல நிகழ்ச்சி.
தமிழ்/தெலுகு திரைப்பட உலக ஜாம்பவான்கள் எல்லோரும் வந்திருந்ததாகத் தெரிந்தது.

கங்கை அமரன் சில சுவாரஸ்யமான பகிர்வுகள் எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும், ஆயிரம் தாமரை மொட்டுக்கள், தன் தாயார் பாடும் கிராமியப் பாடல்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. இப்படி பல கிராமியப் பாடல்கள் 'சுட்டதை' சொன்னார். அதற்குப் பிறகு வந்த வெங்கட் பிரபு, யுவனும் கூட, 'ஏதோ மோகம் ஏதோ தாகம்' என்ற கங்கை அம்ரன் பாடலில் இருந்து, 'யாரோ யாருக்குள் யாரோ' என்ற சென்னை28 பாடலை உரிவிய விதத்தைச் சொன்னார்கள்.

திடுதிப்புன்னு பாரதிராஜாவும் இளையராஜாவும் மேடை ஏறினார்கள்.ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. நண்பேன்-டான்னு மூச்சுக்கு ஒரு தடவை ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சொல்லிக்கிட்டாலும், இவங்களுக்கு இடையில் விழுந்திருக்கும் 'ஈகோ' விரிசல் அப்பட்டமா தெரிந்தது. குறிப்பா, ராசா, தன் 'ஞானித்'தனத்தை மைக்கில் விளம்ப, என்ன சொல்ல வராருன்னே தெரியாம சில நொடிகள் போச்சு.

சுவாரஸ்யமான விஷயம், இவங்க கிராமத்து கால வாழ்க்கையைப் பத்திப் பேசும்போது வந்தது. பாரதிராஜா இளையராஜா அரை டிராயர் வயதில் தன் கிராமத்தில் (அல்லிபுரம்)தன் அண்ணன் தம்பிகளுடன் வந்து, கம்யூனிச பாடல் அரங்கேற்றிய ஒரு நாளில் பார்த்தாராம். அதுக்கப்பரம் தன் நாடகத்துக்கு ராஜா குழுவை இசை அமைக்க வைப்பாராம்.

ஒரு நாடகத்தின் போது, பாரதிராஜா ஹார்மோனியம் வாசித்துக் கொண்டிருந்த ராசாவின் சட்டையை பிடுங்கி போட்டுக்கிட்டு நடிச்சாராம்.
பாரதிராஜா அந்த நாடகத்தில் பூட் பாலிஷ் போடும் பையனா நடிச்சாராம்.
அடுத்த நாளு இளையராஜா அதே சட்டையுடன், நாடகம் நடக்கும்போது, திடுதிப்புன்னு நடுவில் மேடையேறி எனக்கு பாலிஷ் போடு பாலிஷ் போடுன்னு, நாடகத்தில் வராத டயலாக்கை சொல்லிக்கிட்டு இருந்தாராம். ஏன் அப்படிப்பண்ணாருன்னு இப்ப விளக்கம் சொன்னாரு. அதாவது, தன் சட்டையை பாரதிராஜா பிடுங்கிக்கிட்டு நாடகத்தில் அதைப் போட்டு நடிச்சாராம். மறுநாள் அந்த சட்டையை ராசா போட்டுக்கிட்டு நடந்தா, ஏதோ பாரதிராஜாவின் சட்டையை இவரு போட்டுக்க்கிட்டு சுத்தரதா ஊர் மக்கள் நெனச்சுருவாங்களாம். அதனால, இப்படி ஒரு பப்ளிசிட்டி ஸ்டண்ட்டுக்காக தன் சட்டையை போட்டுக்கிட்டு மேடையில் தோன்றினாராம்.

அந்த வயசுலையே இன்னாம்மா யோசிச்சிருக்காரு :)

பண்ணையபுரம் , அல்லிபுரம்னு ஏதேதோ குக் கிராமங்களில் பெரிய படிப்பறிவெல்லாம் இல்லாம வளந்தவங்க, இப்படி வானளாவ உயர்ந்து பிரமிக்க வைப்பது, ஆச்சரியாமான அட்டகாசமான பிரமாண்டமான கலக்கலான பெருமைப்படவேண்டிய போற்றப்படவேண்டிய மெய்சிலிர்க்கவைக்கும் ஒரு விஷயம்.

Wednesday, December 22, 2010

இலவச டிவியை திருப்பிக் கொடுத்த விவசாயி

ஏதாவது மொக்கையா எழுதலாம்னு பொட்டியத் தொறந்தா, இந்த செய்தி கண்ணில் பட்டது.

புதுக்கோட்டையை சேர்ந்த விஜயகுமார் தனக்குக் கொடுக்கப்பட்ட கலர் டிவியை, வேணாம்னு மேடையிலேயே திருப்பிக் கொடுத்துட்டாராம். அதோடில்லாமல், ஒரு பெரிய கடிதத்தையும் எழுதிக் கொடுத்து, அந்த டிவியை முதல்வருக்கே அன்பளிப்பா தன் சார்பா கொடுக்கச் சொல்லிட்டாராம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம், ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்......

விவரங்களை இங்கே க்ளிக்கி வாசிங்க.

2010 சிறந்த தமிழ் படங்கள் - சின்ன amendment

டாப் பத்து போட்டதுமில்லாம amendment வேரயான்னு தலைல அடிச்சரவங்களுக்கு வணக்கம் :)

2010 தமிழ் திரைப்படத்துறையின் அற்புத வருஷம்னு தோணுது. வெட்டியா பன்ச் டயலாக் பேசிக்கிட்டு அடிவயத்துலேருந்து எல்லா ஹீரோப் ப்யலும் ஒரே மாதிரி கத்தி டார்ச் பண்ணிக்கிட்டிருந்த காலத்துல, வித விதமான அணிவகுப்பில், நினைவில் நிற்கும் பலப் படங்கள் வந்த வருடம்.

டாப்10 படம்ஸ் டிசம்பரிலேயே போட்டதால் சிலப் பல படங்கள் கணக்கில் சேராமல் விட்டுப் போனது.
ஈசன் - சுப்ரமணியபுரம் சசிகுமாரின் இயக்கத்தில் வந்த படம். சும்மா சொல்லக் கூடாது, விறு விறு விறுன்னு போரடிக்காமல் இருந்த படம். வழக்கமான அரசியல்வியாதி, அவன் பிள்ளை, கற்பழிப்பு, பழிவாங்கல் டைப்பு கதைன்னாலும், நம்ம வயத்துல ஒரு கிலி இருந்துக்கிட்டே இருக்கு. குறிப்பா, அந்த சொட்டை மினிஸ்ட்டர் செம கலக்கல். Assistant commissionerஆக நடித்த சமுத்திரக்கனியும் அலட்டாமல் நடித்திருக்கிறார். ஈசனாக நடித்த பயல் நல்லா நடிச்சிருக்கான். நல்ல படம்.

Amendment இன்னான்னா, எனது டாப்10ல், இந்த படத்துக்கு ஆறாவது இடம் வழங்கப்படுகிறது.
பத்தாம் இடத்தில் இருக்கும் அங்காடித் தெரு, டாப்10ஐ விட்டு விலகுகிறது.
அம்புடுதேன்.



இன்னும் விடுபட்ட ஏதாவது படத்தை பார்த்துத் தொலைத்தால், மேலும் amendmentஸ் வரலாம்...
;)

Monday, December 20, 2010

Save RTI

Right to Information Act (RTI) என்ற தகவல் அறியும் சட்டம் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

அதன் குரல் வளையை நெரிக்க அரசு முயல்வதாக தெரிகிறது.
குறிப்பாக விண்ணப்பங்கள் 250 வார்த்தைகளுக்குள் இருக்கணுமாம்.

250 வார்த்தைகளில் எப்படி நாம் விரும்புவதை கொட்டித் தீத்து விவரம் கேக்கறது??

இதைத் தவிர இன்னும் பல நெருக்கடிகள் நிறைவேத்த இருக்காம். விவரங்களை இங்கே க்ளிக்கி தெரிந்து கொண்டு பெட்டிஷனில் கையெழுத்து இடவும்.

பரப்பவும்.

நன்றீஸ்.

http://www.petitiononline.com/rtisave/

Tuesday, December 14, 2010

Pick your favorite Flickr விளையாட்டு

PiT ஆர்வலர்கள் விளையாட ஒரு புதிய ஆட்டம் கார்த்திகேயனால் Flickrல் துவங்கப்பட்டுள்ளது.

நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதுதான்:
1) அந்த தளத்துக்கு போங்க.
2) கடைசியா யாரு விளையாடி இருக்காங்கன்னு பாருங்க.
3) அந்த நபரின் Flickr படங்களை பாருங்க. அதுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச படத்தை சொல்லுங்க.
4) அடுத்து வரும் நபர், உங்க படங்களில் எது அவருக்கு புடிச்சிருக்குன்னு சொல்லுவாரு.

அப்படியே ஆடிக்கிட்டே இருக்கலாம் டயர்டாகர வரைக்கும்

இன்னொருத்தர், நம்ம படத்தை பாத்து ஆஹான்னு சொல்றது ஒரு பரம சுகம்.

Friday, December 10, 2010

அதிகாலை படம்

PiTன் "அதிகாலை" போட்டிக்கு எல்லாரும் படம் அனுப்ப ஆரம்பிச்சுட்டாங்க. நாட்டாமை வேலை செய்யும் என்னிடம் ஒரு படம் கூட பத்து மணிக்கு முன்னாடி எடுத்தது இல்லை. நானெல்லாம் அதிகாலை பாத்து பல வருஷம் ஆச்சு. அதுவும் அடிக்கற குளிர்ல இழுத்து போத்தி அலாரத்தை இடது காலால் எட்டி உதைத்து எட்டரைக்கு கொறஞ்சு எழுந்துக்கறதே இல்லை.
ஒரு நாலஞ்சு நாளா ஆறு மணிக்கு அலாரம் வச்சு பிரம்மப் பிரயத்தனம் பண்ணிப் பாத்தும் முடியல்ல.
வடிகட்டின சோம்பேறியாச்சே.
ஒரு வழியா ஏழு மணிக்கு எழுந்து அவசரவசரமா என்னால முடிஞ்ச "அதிகாலை" படம் புடிச்சிருக்கேன், உங்க பார்வைக்கு.



PiTன் சக குடும்ப நண்பர்களுக்கும், போட்டியில் பங்கு கொண்டவர்களுக்கும், கொள்ளப் போகிறவர்களுக்கும், தூக்கத்தை கெடுத்ததுக்காக, ஐம் த சாரி! ;)

Sunday, December 05, 2010

தமிழ் சினிமா - 2010ன் டாப்10 படங்கள்

2010ல் நான் பார்த்த படங்களின், நினைவில் இருந்து, இந்த டாப்10 வரிசை.
நீங்க பார்த்த 2010 படங்களை தராசில் போட்டு, உங்க தரவரிசையை கொமெண்ட்டாகவோ, புதுப் பதிவாகவோ, அரங்கேத்தவும். கடைசியா எல்லார் டாப் 10ஐயும் கலந்து, ஒரு பெரிய சர்வே போட்டு, பதிவுலகின் டாப்10ஐ தேர்ந்தெடுக்கலாம். ஸ்டார்ட் மீஜிக்.

எனது டாப்10 வரிசை இதுதான்.

1) மைனா
ரொம்பவே வியக்க வைத்த படம். நந்தலாலா பார்த்த பிறகு இந்தப் படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன். திகட்ட திகட்ட இனிப்பை சாப்பிட்டு நாயர் கடையின் டபுள் ஸ்ட்ராங்க் ஸ்பெஷல் சாய் குடிச்சாலும், சாயா இனிப்பா தெரியாது. வெத்தா சுவைக்கும். ஆனா, நந்தலாலா என்ற ப்ரமாதமான படத்தின் காட்சிகள் நினைவில் தேங்கி நிற்கும்போதே, மைனா அதையும் தாண்டி ரொம்பவே இனித்தது. ஆரம்ப காட்சியில் இருந்து, விறு விறு விறு வென, அடுத்தடுத்த காட்சிகள் ஒவ்வொரு படி மேல் பயணித்து, உச்சத்தை அடையும் க்ளைமாக்ஸ்.

பச்சைப் பசேல் தமிழ் நாடு. தாய் தந்தையை அடிக்கும் ஹீரோ. தாயை அடிக்கும் ஹீரோயின். ஹீரோயினை வெட்ட வரும் தாய், நல்ல போலீஸ், கெட்ட போலீஸ், கொடூர மனைவி, இனிமையான இசை, மிகவும் யதார்த்தமான நடிப்பு என்று ரவுண்டு கட்டி அடித்த படம்.

புதுமுகம் அமலா ஒரு பெரிய ரவுண்டு வருவார். பார்வையாலேயே மொத்த நடிப்பையும் நடிச்சு முடிச்சுடறாங்க. அற்புதம்.

இயக்குனர், பிரபு சாலமனுக்கு பெரிய வாழ்த்துக்களும், hats offம்.

2) நந்தலாலா
ஏற்கனவே அலசித் தள்ளியாச்சு. (விமர்சனம், vs கிக்குஜீரோ, மிஷ்கினின் விளக்கம்)
Undoubtedly, a classic presentation. தமிழகத்தின் சில ஊரை மகேஷின் ஒளிப்பதிவில் காண்பதற்கே படத்தை பத்து தடவை பார்க்கலாம்.

3)விண்ணைத் தாண்டி வருவாயா
கவித்துமான திரைப்படம். அடக்கி வாசித்த சிம்பு, முதல் முறை பல புதிய ரசிகர்களை தக்க வைத்துக் கொண்ட படம். கௌதம் மேனனின் வசீகரிக்கும் மூவி மேக்கிங்கில் இன்னொரு பிரகாசமான நட்சத்திரம். ஸ்டைலான திரிஷா, வயதானாலும் தான் தான் டாப்பு என்று நிரூபித்த படம்.
ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளேன் ஐயா, நீண்ட நாளுக்குப் பிறகு தமிழில் சொன்ன படம். பாடல்கள் பலவும் 'லவுட்டப்' பட்டிருந்தாலும், ஒவ்வொன்றும் இனிமையான இசை விருந்து.
திரை அரங்கில் பலறையும் சில நேரம் தூங்க வைக்கும், இழுவைக் காட்சிகள் சில இருந்தாலும், எள வயதினருக்கு, ரம்யமான பொழுது போக்குப் படமாக அமைந்தது.

4) வம்சம்
"எப்பாடு பட்டாவது பிற்பாடு கொடாதவர்" என்று ஒரு குடும்பத்தின் பெயர். இன்னும் நினைவில் இருக்கு. மண்மணம் மிக்க அற்புதமான படங்கள் 2010ல் பலப் பல வலம் வந்தது. வம்சம், அதில் முன்னணியில். கிராமத்து ஹீரோவும், ஹீரோயினும், செல்ஃபோனில் பேசிக் கொள்ளும் காட்சிகள் குபீர் சிரிப்பு.
பகை தீர்க்க வரும் ரவுடி கோஷ்டியிடம் இருந்து தப்பி ஓடும் ஹீரோ, திருவிழாவில் பழி தீர்த்துக்க் கொள்ளும் பங்காளி பகையாளிகளின் பன்றி இறைச்சி ஃப்ரையும் காட்சிகள் என்று, பல ருசிகர காட்சிகள் நிறைந்த பொழுது போக்குப் படம். தூள்!


5) எந்திரன்
ரொம்பவே அலசித் தீத்துட்டோம் இதை.
லூஸ்ல விட்டுடறேன், இம்முறை.

6) களவாணி
"என் புள்ளைக்கு நேரம் சரியில்லை. இன்னும் கொஞ்ச மாசத்துல டாப்புல போயிறுவான் டாப்புல"ன்னு சரண்யா தன் பிள்ளைக்கு வக்காலத்து வாங்குவதும், "என்னைய கட்டிக்கறேன்னு சொல்லு"ன்னு லடாய் பண்ணும் வெட்டி ஆஃபீஸர் ஹீரோவும், ரொம்பவே அழகான ஹீரோயின் ஓவியாவும், படத்தின் பலம்.
தீராப் பகை ஹீரோயின் அண்ணனுக்கும், ஹீரோவுக்கும். ஆனா, வெட்டு குத்துன்னு களேபரம் பண்ணாம, காமெடியாக நகரும் படத்தின் அமைப்பு பிரமாதம். எம்புட்டு தடவ வேணும்னாலும் பாக்கலாம் என்கிற லைட் காமெடி. கஞ்சா கருப்புவும் நல்லாவே பண்ணியிருந்தாரு.

7) பாஸ் என்கிற பாஸ்கரன்
தமிழ் திரப்படத்தை பொரட்டிப் போடும் படமெல்லாம் இல்லை. ஆனா, கொடுத்த காசுக்கு, மனசை லேசாக்கும் சூப்பர் டைமிங் காமெடி நிறைந்த படம். வடிவேலு, விவேக்கெல்லாம் சற்றே சலிக்கத் துவங்கிய வருடத்தில், சந்தானம், பக்காவாக அந்த இடத்தை ஆக்ரமிக்க ஆரம்பித்துள்ளார். ஆர்யாவுக்கும் டைமிங் காமெடி நன்றாகவே வருகிறது.

8) அனந்தபுரத்து வீடு
திகில் படம் தமிழுலகம் பலப் பல கண்டுள்ளது. ஆனா, நல்ல பேய் இருக்கும் படம் எந்தப் பட உலகமும் கண்டிராதது. மகனைக் காக்கும், தாய் தந்தை ஆவீஸின், பாசமான திகில் காட்சிகள். படத்தில் வரும் வீடு ரொம்பவே அழகு. வீட்டுக்கு பின்னால் உள்ள குளம். அந்த மாதிரி ஒரு வீடு எங்க இருக்கும் என்ற ஏங்க வைத்த 'அழகியல்' படத்தில்.
வித்யாசமான கதை அமைப்பை அரங்கேற்றியதற்காக இது இந்த இடத்தில். ஹீரோ நந்தா நல்ல நடிகர். தமிழுலகம் அவரை நல்லா பயன்படுத்திக்கணும்.

9) மதராஸப் பட்டினம்
லகான் டோனில் ஒரு படம். அங்கிங்கு தொய்வாக நகர்ந்தாலும், புதிய முயற்சிக்காக இந்த லிஸ்ட்டில். பாடல்கள் நன்றாய் இருந்தன. ஆர்யாவின் நடிப்பு. சினிமாட்டாகிரோஃபி. அழகியல், நாசர், எல்லாம் பக்கபலம்.

10) அங்காடித் தெரு - ரங்கநாதன் தெருவின் அண்ணாச்சிகளின் கீழ் ஆட்டிப் படைக்கப்படும் இளைஞர்/இளைஞிகளின் அடிமை வாழ்க்கையை முகத்தில் அறைந்தார் போல் காட்டப் பட்ட படம். ஆனால், எல்லாரையும் அழுது மூக்கு சிந்த வைக்கணும்னு கங்கணம் கட்டி எடுக்கப்பட்டது போல், சோகம் ஓவர் டோஸாகிப் போனதுதான் சோகம். ஹீரோ, ஹீரோயின் நடிப்பு பளீரென பிரகாசித்தது. பாடல்கள் சூப்பர், குறிப்பா "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை"

பெஷல் மென்ஷன்: தமிழ்படம்
Spoof படங்களுக்கு ஹாலிவுட்டையே எதிர்பார்த்திருந்த நமக்கு ஒரு interesting twist இந்த தமிழ்ப்படம். ஆரம்ப முயற்சியே ஓரளவுக்கு நன்றாய் வந்திருந்தது. இனி பலப் படங்கள் வந்து குபீர் சிரிப்புக்கு உத்தரவாதம் தர புள்ளையார் சுழி போட்ட கூட்டத்துக்குத்தான் நன்றி சொல்லணும். இப்ப யோசிச்சுப் பாத்தா, படத்தின் எந்தக் காட்சியும் நினைவில் இல்லை. ஆனா, ஹீரோ சிவாவுடன் சேர்ந்து கொண்டு டகால்ஜி பண்ணும் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் வெ.மூர்த்தியும், பாஸ்கரும், மனோபாலாவும் படத்துக்கு பெரிய பலம்.

இதைத் தவிர நினைவில் நிற்கும் மற்ற நல்ல படங்கள்,
மந்திரப் புன்னகை - வித்யாசமான முயற்சி. ஹீரோவாக இயக்குனரே அறிமுகமான துரதிர்ஷ்டத்தின் தொடர்ச்சி இதிலிருந்தாலும், ஹிரோ நல்ல ஃபிட் அந்த கதாபாத்திரத்துக்கு.
கதை - இதுவும், புதுமையான கதை, தமிழுக்கு. பிரபலமான ஹீரோ இல்லாமல் புதுமுகத்தைப் போட்டதால், படரவில்லை.

ரொம்பவே எதிர்பார்த்து, பெரிதாய் பல்பு வாங்கிய படம்:
இராவணன் - நொந்து நூடுல்ஸ் ஆகச் செய்தது. தமிழகத்தை விட்டு விலகி விலகி, இந்திக்கு படம் செய்ய ஆரம்பித்ததிலிருந்து சறுக்கிக் கொண்டே இருக்கிறார் மணி. 2011 உருப்படியான பழைய மணிரத்னத்தை நமக்கு தரவேண்டும்.
ஆயிரத்தில் ஒருவன் - கதறக் கதறக் கொடுமை படுத்திய படம். சோழ வரலாற்றிலே ஒரு ஃபிக்ஷனை பிசைந்து டரியல் செய்த செல்வராகவனை எவ்ளோ குட்டினாலும் தகும். செல்வராகவன், ஒரு நல்ல படைப்பாளி என்பதில் ஐயமே இல்லை. இந்த மாதிரி புதிய முயற்சி முயல்வதும், டமில் படத்துக்கு நல்லதே. முயற்சிகள் எல்லாம் மெருகேறி மெருகேறி உன்னதப் படைப்பு வரும் வரை, டரியலை பொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும். பொறுத்துக் கொள்வோம்.

பி.கு: 2010ல் வெளிவந்த படங்களை இங்கே கட்டம் கட்டி போட்டிருக்காங்க - Tamilcinema.com (site has popups and may also have spyware. beware)

நந்தலாலா - மிஷ்கினின் விளக்கம்

நந்தலாலாவுக்கு விமர்சனமும் எழுதியாச்சு, மிஷ்கினை திட்டவும் திட்டியாச்சு.

இப்பத்தான் மிஷ்கினின் இந்த பேட்டி கண்ணில் பட்டது.

தெளிவா, கிக்குஜீரோவின் பாணியில் எடுக்கப்பட்டது என்றும், அந்தப் படத்தின் காட்சியமைப்பையும் அப்படியே இந்தப் படத்தில் வைத்திருப்பதாகவும் தெளிவாய் கூறியிருக்கிறார். மானசீகக் குருவுக்கான நன்றி நவில்தல் மாதிரி இதை செய்திருக்கிறாராம்.

பட டைட்டிலில் போடாத ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது. அப்படிப் போடுவது ஏதாவது சட்டச் சிக்கலை உண்டாக்குமோ என்னமோ?
ஆனாலும், அவசரப்பட்டு அவரைத் திட்டிட்ட(னோ)மோ?

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்




ஐ ஆம் தா சாரி மிஷ்கின்.

Keep up the good work. More originality requested.

Wednesday, December 01, 2010

நந்தலாலா - மிஸ்கினுக்கான தீர்ப்பு

நந்தலாலா பாத்து அளக்கவும் அளந்தாச்சு. விமர்சனம் செய்த ஏனைய பலரும் படத்தை வெகுவாகவே புகழ்ந்திருக்கிறார்கள்.
எந்த அளவுக்கு புகழ்ந்திருக்கிறார்களோ, அதே அளவுக்கு, இந்தப் படம் ஜப்பானிய மொழிப்ப்படமான கிக்குஜீரோ'வின் காப்பி என்றும் அளந்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் மிஸ்கின், இது எதைப் பார்த்தும் காப்பி அடித்ததில்லை என்று அளந்திருந்ததால், படத்தை பார்த்து குற்றம் கண்டுபிடிக்கும் கூட்டத்துக்கு, இது மென்னு துப்ப நல்ல விஷயமாக மாட்டியிருந்தது.

எல்லாரும் சொல்றாங்களே, அப்படி என்னதான் அந்த கிக்குஜீரோவில் இருக்குன்னு பாக்க, அதன் டிவிடியை வாங்கி நேத்து பாத்தேன். இதிலிருந்து, மிஸ்கின் என்னவெல்லாம் லவுட்டி இருக்காருன்னு தெரிஞ்சிருக்கரதுக்காகவும், எந்த அளவுக்கு படத்தில் சொந்தச் சரக்கு இருக்குன்னும் தெரிஞ்சுக்கவும்.
என்ன இருந்தாலும், என்னை நம்பி இருக்கர உங்களுக்காக இதைக் கூடச் செய்யலன்னா, என் தார்மீகக் கடமையிலிருந்து தவறியது போலாகிடும் இல்லையா? அதனால் தான் இந்த மெனக்கெடல் ;)

முதலில் கதைக் கரு. இது 99% ஒத்து வருது. தத்துனூண்டு மாறுதல்களும், பாத்திரப் படைப்புகளும், தமிழில் கண்டிப்பா இருக்கு. கிக்குஜிரோவில், குட்டிப்பயலும், ஒரு கோமாளி ரௌடியும் தாயைத் தேடிச் செய்யும் பயணம். நந்தலாலாவில், குட்டிப் பயலும், ஒரு ம்ன நல நோயாளியும் தாயைத் தேடிச் செல்லும் பயணம்.
ஸோ, கதை கண்டிப்பா லவுட்டப் பட்டிருக்கு. மிஸ்கினுக்கு ஃபெயில் மார்க் இதுக்கு.

ஆனா, பயணத்தில் இருவரும் சந்திக்கும் பலப் பல மக்களின் குணாதிசியங்களும், அவர்களால் படத்திற்கு கிட்டும் நெகிழ்ச்சியான நிகழ்வுகளும், தமிழில் பளிச். மிஸ்கினின் கற்பனையும், படைப்புத்திறனும், இதில் நிச்சயமாய் முந்துகிறது. இதுக்கு கண்டிப்பா 100% கொடுக்கலாம் இவருக்கு.

குட்டிப்பையனின் மேனரிஸம், அப்படியே கிக்குஜிரோவின் தாக்கத்தில் இருக்கு. காட்ச்சிக்கு காட்சி, அவன் தரையைப் பார்த்து நிற்பதை அப்படியே பயன் படுத்தியிருக்கிறார் தமிழில். இதுக்கு ஃபெயில் மர்க்கு.

அங்கே கிக்குஜீரோவாக வரும் கோமாளி ரௌடி, இங்கே பாஸ்கரனாக மிஸ்கின். மிஸ்கின் பல மடங்கு மிளிர்கிறார். எல்லாரிடமும் அதட்டலாய் பேசும் மேனரிஸம், அங்கேருந்து லவுட்டப்பட்டிருக்கிறது. ஆனாலும், அருமையான நடிப்பின் மூலம், மிஸ்கினே மனதில் தங்குகிறார். மிஸ்கினுக்கு 80% கொடுக்கலாம்.

காட்சியமைப்பு/ஒளிப்பதிவு - இரண்டு படங்களிலும், ஒரே மாதிரியான டெக்னிக்கு கையாடல். அவார்டு படங்களுக்கே உரித்தான பாங்கு. ஒரு காட்சி முடிந்த பின்னும், சில விநாடிகள் அதையே காட்டிக் கொண்டிருக்கும் டெக்னிக்கு இரு படத்திலும் உண்டு. கேமரா ஏங்கிள்களிலும் ஒற்றுமை இருந்தது. ஆனா, மகேஷின் கேமராவில் ஏதோ ஒரு பயங்கரமான வசீகரம் இருந்தது. ஜப்பானின் பச்சை நம்ம ஊர் பச்சையுடன் எடுபடவில்லை. மகேஷின் ஒவ்வொரு காட்சியும் கண்ணில் நிற்கிறது. இதில் மகேஷுக்கே அதிகம் மதிப்பெண். 100% கொடுக்கலாம். கிக்குஜீரோவை மகேஷும் பார்த்திருப்பார் என்றே தோன்றுகிறது (மிஸ்கின் சொன்னதை நல்லா உள்வாங்கியும் இப்படி உருவாக்கியிருக்கலாம்).

இசை. கிக்குஜீரோ பார்க்கும்போது, அந்தப் படத்துக்கும், ராஜாவே இசை அமைச்சாராங்கர அளவுக்கு இனிமையா இருந்தது. மனதுக்கு ஒத்தடம் கொடுக்கும் இசைதான் கிக்குஜீரோவிலும். ஆனா, ஒரே வேற்றுமை, நந்தலாலாவில் 2 1/2 மணி நேரத்தில், 2:20 மணி நேரங்கள், இசை இருந்து கொண்டே இருந்தது. 10 நிமிஷம் மௌனமா இருந்திருக்கும். ஆனா, கிக்குஜீரோவில், முக்கால்வாசி, லைவ் ரெக்கார்டிங் தான். ரொம்பப் பிரதான காட்சிகளில் மட்டுமே இனிமையான இசை இசைத்தது. குறிப்பா, ஒரு தீம் இசை மாதிரி பியானோவில், படம் முழுக்க வந்து கொண்டே இருந்தது. படம் முடியும்போது, நமக்கு அந்த இசைத் துணுக்கு மனப்பாடம். ரம்யமான இசை. ராசாவும் மௌன ராகத்தில் இந்த மாதிரியெல்லாம் அநாயசமா பண்ணியிருக்காரு. ஒரு தரமான படத்துக்கு, மௌனம் பல இடங்களிலி அவசியம் என்பது என் எண்ணம். கிக்குஜீரோவில் ஒரு காட்சியில், ஒரு சைக்கிள் ஓட்டரவரு கீழ விழுந்துடுவாரு. அவரை இன்னும் ரெண்டு பேரு இழுப்பாங்க. அவங்க இழுக்கும் சத்தமும், சைக்கிளும் ஆளும் ரோட்டில் சிறாய்க்கும் சத்தமும் 'லைவ்'வாக கேட்பது போல், இசை இல்லாமல் கேட்கும். அப்பத்தான் அந்த மாதிரி காட்சிகளை நல்லா உள்வாங்க முடியும்னு நெனைக்கறேன். தமிழில், அநேகமாய் எல்லா இடத்திலும் ஏதாவது ஒரு இசை வந்துக்கிட்டே இருக்கு. குடுத்த காசுக்கு, காதுக்கு இனிமையான இசை வந்துக்கிட்டே இருந்ததால, அதுக்கும் 100% குடுத்தாக வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கு. நியாயப்படி கிக்குஜீரோவுக்கு அதிக மதிப்பெண் போயாகணும். ஆனா, எனக்கு அப்பாலிக்கா தூக்கம் வராது, ஸோ ஜெயம் ராசாவுக்கே. 100%.

குட்டிப்பயலின் நடிப்பு, தமிழில் ஜோர். அங்கே சுமார்.
படத்தில் வரும் மற்ற பயண நட்புகளும் சகபாடிகளும், தமிழில் ஜோர். அங்கே சுமார்.
மனசுக்கு ஒத்தடம் கொடுக்கும் திரைக்கதையும் பாத்திரப் படைப்பும் தமிழில் டபுள் ஜோர். அங்கே சுமார்.

ஸோ, கதைக் கரு, காட்சியமைப்பு மட்டுமே லவுட்டப் பட்டுள்ளது.

மற்றதெல்லாம் அக்மார்க் மிஸ்கின்/ராஜா/மகேஷ் இணைந்து செய்த மாஸ்ட்டர் பீஸ்!

ஆனா, எது எப்படி இருந்தாலும், அடுத்தவர் உழைப்பை சரியான ஊதியம்/அங்கீகாரம் கொடுக்காமல், லவுட்டியது பெரும் குற்றமே.

எல்லாம் ஒரு க்ளிக் தூரத்தில் இருக்கும், இந்த இணைய உலகில், இனி யாரும் யாருக்கும் தெரியாம காப்பி அடிக்க முடியவே முடியாது.

என் பெரிய வருத்தம், இப்படி ஒரு படைப்பை, உலகச் சந்தையில் கொண்டு போய், பல அவார்டு வாங்கிக் குவிக்கமுடியுமாங்கரதுதான். 'மூலக் கதை'ன்னு 'ஜப்பானிய கிராமியக் கதை'ன்னோ 'கிக்குஜீரா'ன்னோ போட்டிருந்திருக்கலாம். அட்லீஸ்ட், டைட்டிலில், கதை மிஸ்கின்னு போடாம விட்டிருந்திருக்கலாம் :|

மிஸ்கினுக்கு தண்டனையாக, நந்தலாலா படத்தில் வருவது போலவே தலையத் தொங்கப்போட்டுக்கிட்டு சில வாரம் இருக்கணும். அப்பாலிக்கா, 'அஞ்சாதே' போல், நெத்தியில் அடிச்ச மாதிரி, ராசா இசையுடனும், மகேஷ் ஒளிப்பதிவுடனும், நச்சுன்னு ஒரு படம் உடனே கொடுக்கவும். சைலண்ட்டாகிடறோம்.