recent posts...

Sunday, September 02, 2012

லைசென்ஸும் வாங்கியாச்சு, but...

அரசாங்க அலுவலகங்களுக்கு சென்று ஒரு விஷயத்தை செய்து முடிப்பதற்குள், நமக்கு ஏற்படும் எரிச்சலை, வார்த்தைகளால் சொல்லி முடிக்க முடியாது.
அரசாங்க வேலை செய்பவர்களில் பெரும்பான்மை, கடுக்கா சாப்பிட்டுவிட்டு வருவதுபோல், ஒரு எரிச்சலுடனேயே வேலை செய்வது போல் ஒரு தோற்றம் இருக்கிறது.
வாங்கர சம்பளம், அதுக்கு மேல கிம்பளம் எல்லாம் இருந்தும், பொறுப்பாய் வேலை செய்யாமல் தான்தோன்றித் தனமாய் வேலை செய்யும் களவாணிகளுக்கு யார்தான் மணி கட்டுவாங்கன்னு தெரியல்ல.
இணையவழியாக, அநேகம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் காலம் வந்தால்தான், இந்த லொள்ளர்களிடம் மாட்டி விழி பிதுங்காமல் இருக்க முடியும்.

சரி, பொலம்பலைக் கொறைப்போம். விஷயத்துக்கு வருவோம்.

அதாகப்பட்டது, வாகன ஓட்டுநர் உரிமம் வாங்கலாம்னு முடிவு பண்ணி, 'பழகுநர் உரிமம்' (LLR) எடுக்க இரண்டு மாசத்துக்கு முன் தாம்பரம் RTOவை அணுகிணேன். கூகிளார், ஏதோ ஒரு பக்கத்துக்கு இட்டுக்கினு போயி, LLRக்கு ஆன்லைன் படிவம் இருப்பதைக் காட்டி அசத்தினார்.

ஃபாரமை பூர்த்தி செய்து, சொடுக்கி, எந்த நேரத்துக்கு அப்பாயிண்ட்மெண்ட் வேணுங்கர அளவுக்கு முன்னேறியிருந்ததை பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன்.
சொடுக்கி, 10மணிக்கு வாரென்னு ஃபில் பண்ணி, பிரிண்ட் எடுத்துக்கிட்டு, தாம்பரம் RTO அலுவலகத்தை அணுகினால், "அப்பாயிண்ட்மெண்ட்டா?, போயி லைன்ல நில்லுய்யா"ன்னு, வெறுப்பாய் கத்தினார் ஆஃபீஸர் ஒருத்தர்.
அடக்கொடுமையேன்னு, என் பிரமிப்பு எல்லாம் புஸ்வாணமாகி, லைன்ல நின்னேன்.
வெயில் கொடுமை. கூரை கூட இல்லாத வெட்ட வெளியில் புழுதி பறக்கும் பெரிய லைன். கிட்டத்த 20 பேர் லைன்ல நகர்ந்து என் கட்டம் வர, ஒன்றரை மணி நேரம் ஆனது.

கவுண்ட்டரில் இருக்கும் ஆஃபீஸர், நம்மள மாதிரி சாமான்யனை கவனிப்பதற்க்குள், ஸைடில் வரும் 'கிம்பளம்' தரும் ப்ரோக்கர்கள் ஸ்பெஷல் கவனம் பெறுகிறார்கள். பல்லைக் கடித்துக் கொண்டு பணத்தை கட்டி, LLR test முடித்து, கைகட்டி பவ்யமா நின்னு, 'ஆபீஸர், எல்.எல்.ஆர் எப்ப கிட்டும்'னு கேட்டா, "போயிட்டு சாயங்கலம் வா'ன்னு அனுப்பிட்டாங்க.

சாயங்காலம் திரும்ப லொங்கு லொங்குன்னு போனா, எல்.எல்.ஆரை கொடுத்துட்டாங்க. "அப்பாடா, லஞ்சம் கொடுக்காம, எல்.எல்.ஆர்" வாங்கிட்டோம்னு உள்ளூர திருப்தி தலை தூக்க, சில பல வாரங்கள் அதை வைத்துக் கொண்டு காரில் வலம் வந்தோம்.

ஓட்டுனர் உரிமம் வாங்கலாம்னு, சென்ற வாரத்தில், சுபயோக' சுபதினத்தில்,  மீண்டும் ஆர்.டி.ஓ'வை நோக்கி படையெடுத்தேன்.

இம்முறை, கூட 'நைனா'வையும் கூட்டிக் கொண்டு போனது பெரும் தப்பு என்பது ஆரம்பத்திலேயே உரைத்தது. ஆனா, வேர வழியில்லை. எல்.எல்.ஆர் இருக்கும்போது, லைசென்ஸ் இருக்கர ஒருத்தரு கூட வந்தே ஆகணும்.

வழி நெடுக்க, "டேய் மவனே, ரெண்டாயிரம் ரூவாய் நம்ம தெரு ட்ரைவிங் ஸ்கூல் காரன்கிட்ட கொடுத்தா, நீ இப்படி அலைய வேணாம். வூட்டுக்கே கொண்டு வந்து லைசென்ஸ் கொடுத்துருவான். வை திஸ் தேவையில்லா அலைச்சல்?"னு கேள்வி மேல கேள்வி போட்டு தொளச்சிக்கிட்டே வந்தாரு.

ஸ்ஸ்ஸ். நம்ம கொள்கை, இயன்றவரை லஞ்சம் கொடுக்காமல் இருத்தல். அதையெல்லாம் சொன்னா, "நீ ஒருத்தன் கொடுக்காம இருந்தா வெளங்கிருமா. போடா போக்கத்தவனே"ன்னு அடுத்த அர்ச்சனை விழும்.

அதே வெட்டவெளி இடம், வெயில் பின்னி எடுக்க, ஐம்பது அறுபது பேருடன் லைனில் நின்று, கட்டணம் கட்டினேன். புழுதி பறக்கும் அந்த இடத்தில் ஒரு கூரையை போட்டு, சில நாற்காலியை வைக்கலாம்னு ஏன் நம்ம தாம்பரம் RTOக்கு தோன்றவில்லை? அம்புட்டு ஃபீஸ் வாங்கரீங்களே?
'
ஃபீஸ் கட்டியதும், நம்ம RTO inspectorஐ போய் பாத்து, "சார், நான் ரெடி, நீங்க ரெடியா, ஓட்டிக் காட்டவா?"ன்னு கேட்டேன். "இன்னிக்கு இல்ல, நாளிக்கு காலைல வாங்க"ன்னு சொல்லிட்டாரு.

ரென்டாவது நாள், திரும்ப நைனாவுடன் கிளம்பி, கரடு முரடான பாதையெல்லாம் கடந்து, ஒரு குட்டி மைதானம் இருந்த இடத்துக்குப் போனோம். நானும் பல வருஷமா பாக்கறேன், தாம்பரம்-டு-ஆர்.டி.ஓ ஆபீஸ் போகும் வழி குண்டும் குழியுமா படு கேவலமா இருக்கு. கவனிப்பார் இல்லாத வார்டா இது? ஹ்ம்.

டூ.வீலர் மக்களெல்லாம், 'எட்டு' போடும் இடம் அது. நம்ம ஆபீஸர், ஒரு திண்ணையில் ஒக்காந்து, எல்லாருக்கும், 'பாஸ்/ஃபெயில்' போட்டுக்கிட்டிருந்தார்.  ப்ரோக்கர்கள் ஒவ்வொருத்தர் பேரா கூப்பிட, மக்கள்ஸ் எட்டு போட்டுக்கிட்டே இருந்தாங்க.
அதை வேடிக்கை பார்ப்பது செம்ம டைம்-பாஸ். ஒருத்தர் எட்டுக்கு பதிலா, ஆச்சரியக் குறி போட்டு, நம்ம ஆப்பீஸரையே இடிக்கப் பார்த்தார். அவரையும், 'பாஸ்' செய்திருப்பார் என்றே தோன்றுகிறது.

வழக்கம்போல்,  'கடு கடு'வென காட்சியளித்த, நம்ம ஆபீஸரை அணுகி, சார், டெஸ்டுக்கு நான் ரெடி, கார் கொண்டு வந்துட்டேன், இந்தாங்க ஃபார்ம்'னு நீட்டி முழக்கினேன். ஃபார்மை வாங்கி, சரக்னு பாத்துட்டு, "pollution certificate வேணும், போயி வாங்கிட்டு அப்பரம் வாங்க. அப்பத்தான் டெஸ்ட்டு"ன்னு குண்டைத் தூக்கிப் போட்டாரு.

நமக்கு எரிச்சல் வந்தாலும், அக்கம் பக்கத்தில் விசாரித்ததில், RTO ஆபீஸுக்கு பக்கத்தில் இந்த சர்ட்டிபிக்கேட்டை தருவதாய்ச் சொன்னார்கள். 50ரூ தண்டம் கட்டி, அதை வாங்கி, மீண்டும் ஆபீஸரை பார்த்தில், அதே கடு கடு டோனில், டூ-வீலருக்கு pollution certificate எங்கன்னாரு.
ஒரே நாள்ள நான் எப்படி சார், காரையும், டூ-வீலரையும் கொண்டு வருவேன். இன்னிக்கு கார்லதான் வந்திருக்கேன். இன்னிக்கு இத்தை கொடுங்க, நாளைக்கு டூ-வீலரோட வரேன்னேன். அதுக்கு, 'அதெல்லாம் முடியாது, போயிட்டு கொண்டு வா'ன்னாரு.

நான் கொஞ்சம் கடுப்பா, 'அப்ப கார் லைசென்ஸ் மட்டும் கொடுங்க. டூ-வீலர் வேணாம்'னேன். கடுப்பாய், 'சரி, அதை ஒரு வைட் பேப்பர்ல எழுதிக் கொடு'ன்னு சொல்லிட்டு, அங்கிருந்து வேறொரு இடத்துக்கு, கார்-டெஸ்ட் நடத்த எஸ்கேப்பாயிட்டாரு.

அவசரவசரமா, அந்த லெட்டரை எழுதி, அவரது அசிஸ்டெண்ட்டுக்கிட்ட கொடுத்து, 'கார்-டெஸ்ட்டுக்கு எங்க போகணும்'னு கேட்டா. 'சாருக்கு பின்னாடியே போங்க. கிஷ்கிந்தா பக்கத்துலதான் எடுப்பாரு'ன்னு சொல்லிட்டு அவரு போயிட்டாரு.

நானும் காரை எடுத்துக்கிட்டு போனா, கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரத்துக்கு அப்பரம், ட்ரைவிங் ஸ்கூல் ப்ரோக்கர்கள் ஆட்களை எல்லாம் டெஸ்ட் எடுத்து முடிச்சுட்டு அந்த் எடத்துக்கு வந்தாரு. 'சார், நான் ரெடி. நீங்க ரெடியா?. டெஸ்ட் எடுத்துடலாமா?'ன்னு கேட்டேன்.

அதே வெறுப்புடன், 'எங்க உன் காரு. போயி ஒக்காந்து இங்க வந்து நிப்பாட்டுன்னாரு'. நான் ஓடிப்போயி, கார்ல் ஒக்காந்து விஷுக்னு அவரு நின்ன எடத்துக்கு வந்து நிப்பாட்டினேன். அதுக்குள்ள, அவரு இன்னொரு ட்ரைவிங் ஸ்கூல் காருக்குள் ஒக்காந்துட்டாரு. நான் ஓட்டினதை பாத்தாருன்னு கூட தெரியல்ல. "சரி சரி, ஆஃபீஸ்ல போயி வெயிட் பண்ணு. நான் வந்துடறேன்'னு போயிட்டாரு.
(இவர் படுத்தியதை பார்த்ததில், ஈசன் படத்துல வர மினிஸ்ட்டர் லுங்கிய கட்டிக்கிட்டு மதியானம் படுத்துத் தூங்கர காட்சி நினைவில் வந்தது.)

குழப்பத்தில், நானும் ஆபீஸ்க்கு போயி, மூணு மணி நேரம் வெயிட்டினேன். எல்லாரும், சூடான பிரியாணி பொட்டளம் லஞ்சுக்கு (ப்ரோக்கர்கள் உபயம்) பிரிச்சு மேய, மொத்த ஆபீஸும் பிரியாணி வாசம் கம கமக்க, நான் பசியோட, எங்கப் போயி தொலஞ்சாரு இந்த ஆளு என்ற கணக்கில் வெயிட்டிக் கொண்டிருந்தேன்.

மேலும் இரண்டு மணி நேரம் ஆனதும், பொறுமை போனது. இவரைக் காணும். மற்ற ஆபீசர்களிடம் விசாரித்தால், பொறுப்பாய் ஒரு பயலும் பதிலைச் சொல்லவில்லை. அவரு FC (fitness certificate) கொடுக்க வேற ஒரு எடத்துக்கு போயிருப்பாருன்னு சொன்னாங்க.

என்னை வெயிட் பண்ணச் சொல்லிட்டு, இவரு இஷ்டத்துக்கு இப்படியா சுத்தரதுன்னு செம கடுப்பு எனக்கு. இருந்தாலும் FC போடும் இடத்துக்கும் RTO ஆபீஸுக்கும் அலைந்து திரிந்ததில் அந்த ஆபீஸரை காணவே காணும்.

வெறுப்பு அதிகமாக, மேலாளரைப் பாக்கணும்னு கேட்டா, மேலாளரும் அன்னிக்கு வரலைன்னு சொன்னாங்க. ஸ்ஸ்ஸ். இன்னொரு ஆபீஸரிடம், "காலைலேருந்து காஞ்சுக்கிட்டு இருக்கேன். டெஸ்ட் முடிச்சாச்சு. நீங்க கையெழுத்து போட்டா, நான் ஃபோட்டொ எடுத்துட்டு லைசென்ச் வாங்கிட்டுப் போயிடுவேன். இனிமேலேயும் வெயிட் பண்ண முடியாது"ன்னு சொல்லிட்டேன். அவரும் மற்றவர்களைப் போல், அவர் வந்துடுவாருன்னு டபாய்க்க, "சந்தைக்குப் போவணும் ஆத்தா வையும் காசு கொடு" ஸ்டைலில், நான் கேட்டதையே கேட்டுக் கொண்டிருக்க,  அவரும், வேண்டா வெறுப்பாய் கையெழுத்தைப் போட, ஓடோடிச் சென்று லைசென்ஸுக்கான புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

மறுநாள் காலை வரச் சொன்னார்கள், லைசென்ஸ் பெற்றுக் கொள்ள.

மீண்டும் நைனாவுடன், காலங்காத்தால போயி நின்னா, சூப்பரிண்டண்டன்ட் இல்லை, சாயங்காலமா வாங்கன்னாங்க.
எல்லாத்துக்கும் துணிஞ்சு, ஒரு 'நிர்வாணா' நிலையில் இருந்ததால், எரிச்சல் பெருசாய் எழவில்லை. சிரிச்சுக்கிட்டே, "எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன்டா'ங்கர மாதிரி, மீண்டும் சாயங்காலம் போயி, ஒரு வழியா லைசென்ஸ வாங்கிட்டேன்.

ப்ரோக்கர் மூலமாய் போனால், கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய், ஒரு லைசென்ஸ் பெற. கண்டிப்பாய், சிலப் பல ஆயிரங்கள், இதில் கிம்பளமாய் போக 99% வாய்ப்பிருக்கிறது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 200 பேர் லைசென்ஸ் வாங்கராங்க. நீங்களே, கணக்கு போட்டு பாத்துக்கங்க.
இப்படி சுலபமாய் வரும் கிம்பளத்தை இழக்க விரும்பாததால், டைரெக்ட்டாய் ப்ரோக்கர் (ட்ரைவிங் ஸ்கூல்) இல்லாமல்  வரும் என்னனைப் போன்றவர்களை, வாட்டி எடுக்கிறார்கள் RTO மக்கள், என்பது அடியேனின் ஆணித்தரமான கருத்து.

same-day ப்ராசஸிங் செய்து, அன்றே கொடுக்கப்பட வேண்டிய லைசென்ஸ், நாலு நாட்கள் அலைந்து திருந்த பின்னர், ஏகப்பட்ட நேர விரையம், பெட்ரோல் செலவு, பல மன உளைச்சல்களுக்கும் ஆளான பின்னர், மட்டுமே பெற முடியும், கிம்பளம் கொடுக்க விரும்பாதவர்கள்.


தாம்பரம் RTO கவனிக்க:
பெரிய பதவியில் இருக்கும் உங்களைப் போன்றவர்கள் நினைத்தால் மட்டுமே, அழுகிப் போயிருக்கும், அரசு அலுவல்கள், திறம் பெற நடக்க வாய்ப்பு ஏற்படும்.
ஆவன செய்க, உடனே!

கொசுறுச் செய்தி: கடுப்பேற்றிய ஆபீசர், சமீபத்தில் Zion பள்ளிப் பேருந்து  FC விவகாரத்தில் கைதாகி, பின்னர் ஜாமீனில் வந்தவர் என அரசல் புரசலாய் காதில் விழுந்தது. கிர்ர்ர்ர். திருந்தித் தொலைங்க சார்களா.


 

7 comments:

ஊர்சுற்றி said...

மக்களே இந்த விசயத்தெல்லாம் இப்ப பெருசு பண்ணுறதில்ல. பெருசா நம்பர ஏதாவது பார்த்தாத்தான் பதறிப்போயிடுறாங்க. மத்தபடி ஆயிரம், இரண்டாயிரமெல்லாம் ரொம்ப சர்வசாதாரணமா போயிட்டுதுங்க! இவங்க இப்படி இருக்குறதுல ஆளுறவங்களுக்கு நிறைய வசதி. அதனால, ஆள்றவங்க இதையெல்லாம் கண்டுக்குறது கிடையாது. மேல இருக்குற அதிகாரிங்களும்தான்!

SurveySan said...

ஊர்சுற்றி, ரொம்பவே துல்லியமா சொல்லிட்டீங்க. அநேகம் பேரும், லஞ்சத்தை, ஃபீஸ் மாதிரி நெனைக்க ஆரம்பிச்சிட்டாங்க.

ஆனா, அதைக் காரணமா வச்சுக்கிட்டு, பெருச்சாளிகள் சுலபமா சுரண்டி, மற்றவர்களின் நிம்மதியைக் குலைப்பது ஒப்புக் கொள்ள முடியாது.

திண்டுக்கல் தனபாலன் said...

(டூ.வீலர்) ஆச்சரியக்குறி போட வைப்பது... பணம் தரவில்லை என்றால்... இந்தியன் படத்தில் கவுண்டமணி சொன்னது போல் 11 கூட போடச் சொல்வார்கள்...

பணம் தாங்க எல்லாம்... எல்லா ஊரிலும் இதே நிலை தான்... அங்குள்ள செங்கல் கூட காசு கேட்கும்...

வவ்வால் said...

சர்வேசன்,

உங்க அனுபவம் அத்தனையும் சரியே, இதான் நாட்டு நடப்பு, நீங்களே ஒரு முறை புகார் செய்தால் என்ன சொல்லி இருப்பிங்க,ஒரு விடயத்தில்.

இது போல பல இடத்திலும் நடக்கிறது, லஞ்சம் தரவில்லை எனில் அலைச்சல் தான்,அலைய முடியாமல் இல்லை தனியார் அலுவலகத்தில் வேலை செய்பவர் நிலையை யோசித்து பாருங்கள் நாளு நாளைக்கு தொடர் லீவ் போட முடியாது.

இந்தியன் படத்திலே இதுவரும் ,கிரேசி மோகன் முதலில் முறைத்து விட்டு அப்புறம் அண்ணா நாளு நாளைக்கு லாஸ் ஆப் பேல வரமுடியாதுன்னா பார்த்து செய்யுங்க என கேட்பார்.

இது குறித்து புகார் செய்ய சென்றால் அது பல வருடம் இழுக்கும், இப்போ சியோன் பள்ளியில் மாட்டியதும் எத்தனைப்பேரு நல்லா மாட்டினான் என சந்தோஷப்பட்டிருப்பார்கள், அது தான் லஞ்சத்தின் விளைவு.

சென்னையில் வீடுகட்ட அனுமதி வாங்க போய்ப்பாருங்கள் நீங்கள் என்ன தான் பொறுமைக்காத்தாலும் வேலை நடக்காது,பணம் கொடுத்தே ஆகனும்.

நான் ரேஷன் கார்ட் முகவரி மாற்ற அலைந்து அடப்போங்கப்பா கார்டே வேண்டாம் என விட்டுவிட்டேன் , 1000 ரூ கொடுத்தால் தாலுக்கா ஆபிசில் அவனே எல்லாம் முடிச்சு தராங்க இப்போ அதை செய்யலாம்னு பார்க்கிறேன், (காசு என்பது முன்னரே தெரியும் ஆனால் அப்போ வேண்டாம் என நினைத்தேன்)

வடுவூர் குமார் said...

காசு கொடுக்காமல் செய்ததற்கு பாராட்டுகள்.
வவ்வால் - ரேஷன் கார்டு வெறும் Identity காக வாங்கலாம் என்று அலைந்து வெறுத்துப்போய்...விட்டுவிட்டேன்.

pudugaithendral said...

பாஸ்போர்ட் வாங்க பட்ட கஷ்டத்தை 3 பதிவா போட்டேன். :((

அரசாங்க அலுவலகத்துக்கு போகாம இருக்கணும்னா முடியாது. ஏதாவதுஒரு காரணத்துக்காக போயி அவஸ்தை பட்டே ஆக வேண்டிய கஷ்டகாலம் நமக்கு. கிம்பளம் இல்லாம எதுவும் நடக்க மாட்டேங்குது. :((

Nat Sriram said...

இந்தியா போயிட்டீங்களா சார்?