வெள்ளிக் கிழமை வரவேண்டிய பொட்டி வராததால், சனிக்கிழமை எட்டு மணி ஆட்டம் ஹவுஸ்ஃபுல். அதுக்கு டிக்கெட் கிடைக்காம 11 மணி ஆட்டத்துக்கு போயிருந்தோம்.
அம்பானிகள் திரையரங்குகளை வாங்க ஆரம்பிச்சிருக்கானுவ. எங்க ஊரு மொக்கை தியேட்டரை வாங்கியிருக்காங்க. வெளீல மட்டும் பளிச்னு பெயிண்ட் அடிச்சுட்டு, அரதப் பழசான ஸ்பீக்கரையும், ப்ரொஜெக்ட்டரையும் கொண்ட IMC6 Big Cinemasல ஆயிரத்தில் ஒருவன் பார்த்துத் தொலைத்தோம்.
மூணு வருஷம் முக்கி முக்கி எடுத்து, பைசாக்கு ப்ரயோஜனமில்லாத ஒரு அவுட்புட். செல்வராகவனின் கலீஜ் டச்-அப் ஆங்காங்கே. முச்சா போகும் ஹீரோயின்; பச்சை பச்சை வசனங்கள்; அரை நிர்வாண ஹீரோயின்கள்.
பல சேனல்களில், செல்வராகவனின், பேட்டிகளை பார்த்தபோது, என்னமோ தமிழர்களுக்கெல்லாம் நம்ம வரலாறும் நம்ம பராக்ரமும் தெரியாதுன்னும், அதை இந்தப் படம் எடுத்துக் காட்டி நம்மை எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கப் போவுதுன்னும் சொன்னாரு. நல்லா சிலிர்க்க வைக்கிறீங்கய்யா சிலிர்க்க.
சோழ மன்னன் தன் மகனை ஒரு பெருசுகிட்ட கொடுத்துட்டு, இவனை காப்பாத்துங்கன்னு சொல்லிட்டு பாண்டியர்களிடம் போர்ல தோத்துடறாரு. பையனோட சேத்து பாண்டியர்களின் குலதெய்வ சிலையையும் சோழ குரு எடுத்துக்கினு எங்கியோ கண்ணு காணாம போயிடறாராம்.
ப்ரதாப் போத்தன் இக்கால ஆர்கியாலஜிஸ்ட். இந்த சோழர்கள் எங்க போனாங்க என்ன ஆனாங்கன்னு தேடிக்கினு எங்கியோ வியட்நாம் தீவுல போயி, இவரும் காணாம போயிடறாரு.
இவருக்கு பின்னால், ரீமா சென், கார்த்தி, பிரதாப் மகள் ஆண்ட்ரியா போறாங்க.
இவங்க சோழர்களைப் பாக்கறாங்களா, அப்பரம் என்ன ஆகுது, எக்ஸ்ஸட்ரா எக்ஸட்ரான்னு, ஒரு நல்ல 'தீம்' தான் படத்துக்கு.
ஆனா, அந்த 'தீமை' திரைக்கு சரியாக கொண்டு வரத் தெரியாமல்,மூணு வருஷம் பிராண்டியதால், திரையில் ஒவ்வொரு காட்சியும் டோட்டல் டேமேஜ். நமக்கும் டோட்டல் எரிச்சல். சோழர்களையும், சோழ மன்னரையும் காட்டுமிராண்டி மாதிரி காட்டி மனசை வேர ரொம்பவே நோகடிச்சிட்டாங்க.
ரீமா சென், கார்த்தியுடன் சேந்து, 'அதோ அந்த பறவை போல', ரீமிக்ஸுக்கு குத்தாட்டம் போடரதுல இருந்து நம்ம நோகல் தொடருது.
வியட்நாம் தீவுக்கு படகில் போகும்போது வரும் கிராஃபிக் காட்சியை பார்த்ததுமே, $12 எள்ளுதான் என்பது விளங்கியது. ரூ35கோடி செலவாம். ஹ்ம்!
விட்டலாச்சாரியா படங்களில் கூட இதை விட இன்வால்வ்டா ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பண்ணியிருப்பாங்க.
கார்த்தி - மூணு வருஷம் , ஜம்முனு மூணு படத்துல நடிச்சுட்டு நிம்மதியா இருந்திருக்கலாம். உப்புச்சப்பில்லா ரோல் இவருக்கு. பல காட்சிகளில் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறார். கடைசி 30 நிமிடம் மட்டுமே ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பிட்டிருக்கு.
ரீமா சென் - இவங்கதான் படத்தோட ஹீரோ! படம் முழுக்க வியாபிச்சிருக்காங்க. நல்லா திறமையை வெளிப்படுத்தியிருக்காங்க. ஒரு சில இடங்களில், வல்கரா இருந்தாலும், அருமையான நடிப்பு. வாய்ப்பை அருமையா உபயோகப்படுத்திக்கிட்டாங்க. அதிரடியா கலக்கியிருக்காங்க. படத்தில் உருப்படியான ஒரு விஷயத்தில், ரீமா சென்னும் ஒருவர். கார்த்தியை டம்மி ஆக்கிட்டாங்க பல இடத்தில்.
ஆண்ட்ரியா - படத்துல எதுக்கு இருக்கராங்கன்னே தெரியாம, பல காட்சிகளில், சும்மாகாட்டி வராங்க. கடைசி அரை மணி நேரம் காணாமயே போயிடறாங்க.
பார்த்திபன் - சோழ ராசாவா வராராம். கொமட்டிக்கிட்டு வருது சில காட்சிகளில். நம்ம கற்பனையில் இருக்கும், 'சுந்தர சோழரும், ராஜ ராஜரும்' புஸ்வாணமாக்கிய எரிச்சலோ என்னமோ, இவரை சுத்தமா புடிக்காம போயிடுச்சு. டான்ஸ் ஆடும்போதெல்லாம், ரெண்டு அரையலாம் என்றளவுக்கு எரிச்சல் வந்தது என்றால் மிகையல்ல.
செல்வராகவன் - 7G எனக்குப் பிடிச்ச படம். அதிலும் கூட வளைந்து நெளிய வைக்கும் 10 நிமிஷம். அதை கூட 'செல்வா' டச்னு மன்னிச்சு விட்டு, படத்தை பலதடவை பாத்திருக்கேன். புதுப்பேட்டை கூட பிடிச்சிருந்தது. வித்யாசமா எடுக்கணும்னு, இப்படி ஓவரா கோட்டை கட்டப் பாத்தது நல்ல விஷயம்தான். பாராட்டப் பட வேண்டியதும் கூட. ஆனா, கற்பனை குதிரையை ஒழுங்கா ஓட்டத் தெரியோணும். கலீஜ் குதிரையை அடக்கப் பழகோணும். ஒரு வரட்டு மைல் கல்லை எட்ட, இப்படி ரெண்டு குதிரையையும் கன்னா பின்னான்னு ஓட்டி, இம்சை படுத்தக் கூடாது. இனி வரும் படங்களிலாவது, அதிமேதாவித்தனத்தை குறைத்து, தன்னடகத்துடன், ஸ்க்ரீன்ப்ளேயை அணுகவும்.
சண்டைக்காட்சிகள் எல்லாம் இழுவை ரகம். ரத்த மணம்.
ஒரே ஆறுதல், ஒரு சில 'செட்'கள். குகைப் ப்ரதேசம், சோழ கட்டிடங்கள் எல்லாம் நல்லா பண்ணியிருக்காரு ஆர்ட் டைரக்டர். காட்டு வாசிகள், சோழர்கள்னு எல்லாரின் காஸ்ட்யூமும், நல்ல தரத்தில் இருந்தது.
படம் முழுக்க லாஜிக் ஓட்டைகள்; ஒட்டாத காட்சியமைப்புகள்;
செல்வராகவனுக்கு ரொம்பப் பிடிச்ச பல படங்களின் சிறந்த காட்சிகளை ரீமேக்கனும்னு நெனச்சு பண்ணியிருக்காரு போல. கிளாடியேட்டர், மெக்கனன்ஸ் கோல்ட், அப்போகாலிப்ஸ், அது இதுன்னு ஒவ்வொரு காட்சியை எடுக்கப் பாத்து, எல்லா காட்சியிலும் அரைகுறை அவுட்புட்.
நல்ல பாடல்களில், இரண்டு மட்டுமே படத்தில். ஜி.வி.பிரகாஷின் பாடல்கள் அருமையா வந்திருக்கு. பின்னணி இசையெல்லாம் கவனிக்க மூடே இல்லை. சோழரை காட்டும்போது, கிட்டார் அதிருது. என்ன லாஜிக்னு புரியல்ல.
11மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய படம், லேட்டா 11:30 ஆரம்பிச்சதாலும், முதல் ரெண்டு மணி நேரம், தொய்வின் உச்சத்தில் நகர்ந்ததாலும், கிளைமாக்ஸின் அரைமணி நேரம், ஒரு deep meditative stateல் இருந்ததால், திரையில் என்ன நடந்ததுன்னு சரியா ஞாபகம் கூட இல்லை. கார்த்தி, சோழ இளவரசரை தூக்கிக்கினு ஸ்க்ரீன் அப்படியே ஃப்ரீஸ் ஆகி, 'சோழ மன்னனின் பயணம் தொடரும்..' போட்ட போது, மொத்த தியேட்டர் கும்பலும், 'ஐயோ! போதும்யா போதும்"னு அலறியதும் தான், என் deep meditative stateல் இருந்து வெளியில் வந்தேன்.
ஹ்ம்! படத்துக்கு போறதுக்கு முன்னாடி விமர்சனம் படிக்காம போவணும் என்ற கொள்கையை ரிலாக்ஸ் பண்ணிக்கணும். முன்னாடியே மக்கள்ஸின் புலம்பலை படிச்சிருந்தா, சுதாரிச்சிருக்கலாம்.
இனி ஒன்னியும் பண்ண முடியாது, உங்களில் சிலரின் $12 காப்பாற்ற உதவுவதை விட.