நான் எவ்ளோ உஷாரான ஆளுன்னு உங்கள் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். ஒரு தொடப்பம் வாங்கணும்னா கூட ரெண்டு கடை ஏறி எறங்கி, இங்கைக்கு அங்க ஒரு ரூபாய் வெலை கம்மியான்னு பாத்து வாங்கும் நல்ல பழக்கம் கொண்டவன்.
எங்கூர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க. என்னதான் ஒடம்பு முழுசா எண்ணை தேச்சு பீச்சு மணலுல விழுந்து பொரண்டாலும், ஒட்டரதுதான் ஒட்டும்.
அது ரொம்பவே சரி. பலருக்கும் அந்த அனுபவமும் இருந்திருக்கும்.
டாக்ஸி செலவு மிச்சப்படுத்தலாம்னு, சொந்தக் காரை ஏர்போர்ட்ல பார்க் பண்ணிட்டுப் போனா, திரும்ப வரதுக்குள்ள அதன் டயர் பன்ச்சராயி ரெட்டை செலவாக்கியிடும். இந்த மாதிரி, ஒட்டரதுதான் ஒட்டும்னு அடிக்கடி அசரீரி நிகழ்வுகள் நடந்தாலும், எண்ணை தேச்சுக்கிட்டு மண்ணுல பொடரும் படலம் தொடர்ந்துகிட்டே தான் இருக்கும்.
அடிமேல அடி அடிச்சா, அம்மிக்கல்லும் நகரும் என்ற இன்னொரு பழமொழி மேல் பாரத்தைப் போட்டு, நாம விகரமாதித்தன் கணக்கா, என்னிக்காவது ஒட்டாதான்னு காலத்தை ஓட்டறேன்.
போன வாரம் ஒரு நாள், விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் பாத்துக்கிட்டிருக்கும்போது, கதவை டொக் டொக் டொக்னு யாரோ தட்டினாங்க. இந்த ஊருல ஃபோன் பண்ணாம நமக்கு ஹ்டெரிஞ்சவங்க யாரும், திடுதிப்னு இப்படி வந்து கதவை தட்ட மாட்டாங்க. ரெம்ப நல்லவங்க.
இப்படி தட்டரது, முக்கால் வாசி, "மாரியம்மனுக்கு கூழு ஊத்தணும்"னு வசூல் நோட்டுடன் டரியல் பண்ணும், பேர்வழிகள்தான். மாரியம்மனுக்கு பதிலா, இங்க, Red Cross, Missing Kids, FireMen Association, அது இதுன்னு எதையாவது ஒரு கொம்பேனி பேரை சொல்லிக்கிட்டு வருவாங்க. இதில் முக்கால் வாசி டுபாங்கூர் என்பது நம்மூர் மக்களின் பரவலான நம்பிக்கை. நானும், வசதியாப் போச்சேன்னு, மனசை கல்லாக்கிக்கிட்டு, "வூட்டம்மா வூட்ல இல்லீங்க. நாளைக்கு வாங்க"ன்னு சொல்லிட்டு கதவை சாத்தி, சூப்பர் சிங்கரை கவனிப்பேன்.
ஆனா, சென்றவார சுபயோக சுபதினத்தில், இப்படி கதவைத் தட்டியதும், எழுந்து போயி கதவை தொறந்து "வூட்டம்மா.."ன்னு சொல்றதுக்கு பாத்தா, கதவைத் தட்டியது மூணு பொடிப் பயலுவ. ஆறேழு வயசு இருக்கும். ரெண்டு பேரு, தொரைப் பயலுவ. ஒரு பொண்ணு. கண்ணாடியெல்லாம் போட்டுக்கிட்டு ஒரு படிச்ச கள இருந்தது பயலுவளுக்கு.
"ஹாய், நாங்க School Boy Scouts"லேருந்து வரோம். ஸ்கூல்ல ஒரு மேட்டருக்காக நிதி வசூல் பண்றோம். நீங்க செய்ய வேண்டியதெல்லாம், இந்த பிஸ்கோத்துல ஏதாச்சும் ஒண்ண வாங்க வேண்டியது மட்டுமே"ன்னு ஒரு துண்டு பேப்பரில் பலப் பல பிஸ்கெட் படம் போட்டிருந்ததை காட்டி, கெக்க பக்கேன்னு டயலாக் விட்டாங்க.
ஹ்ம். குறைந்தது $20 ஒரு பிஸ்கோத்து பாக்கெட்டுக்கு. சரி, வெத்தா $20 கொடுக்காம, பிஸ்கோத்தாவது கிடைக்குதேன்னு தோணிச்சு.
அதைத் தவிர, எப்பவும் உஷாரா இருக்கும் நம்ம அல்ப மனசு, வந்திருந்த வாண்டுகள், 'வெள்ளக் காரத் தொரப்' பசங்களப் பாத்ததும், இவனுங்க கண்டிப்பா நெம்ப நல்லவங்களாத்தான் இருப்பாங்க. இந்த வயசுலையே எம்மாம் பெரிய தொண்டு உள்ளம் வரவைக்கறாங்க, தொரை தொரைதான்னு உள்ளூர புகழ்ந்துட்டு, உள்ள போய், $20 எடுத்து வந்து பயலுவ கிட்ட கொடுத்து, அவங்க நோட்டுல பேரு ஊரெல்லாம் எழுதிக் கொடுத்தேன். பிஸ்கோத்து எப்பத் தருவீங்கன்னு கேட்டேன். இதோ இன்னும் ரெண்டு வீட்டை முடிச்சுட்டு, பிஸ்கோத்து பாக்கெட் கொண்டு வந்து தருவோம்னாங்க.
நானும் கதவைத் தொறந்து வச்சுட்டு, சூப்பர் சிங்கரை கண்டுக்க ஆரம்பிச்சேன். சூப்பர் சிங்கர் முடிஞ்சு, உள்ளூர் செய்திகள் முடிஞ்சு, Seinfeld முடிஞ்சு, தூக்கமே வந்தாச்சு. ஆனா, பயலுவளைக் காணும். வெளீல எட்டிப் பாத்தா, பசங்க இருக்கர சுவடே சுத்து வட்டாரத்துல காணும்.
ஒரு வேளை, லேட்டாயிருச்சுன்னு, மறுநாள் குடுத்துக்கலாம்னு விட்டிருப்பாங்களோன்னு நெனைச்சேன். ஒரு நாள் ஆச்சு, ரெண்டு நாள் ஆச்சு, ஒரு வாரமும் ஆயிடுச்சு.
பொடிப் பயலுவ $20 ஆட்டையப் போட்டுட்டானுவ. ஒட்டிய மண்ணில் கொஞ்சம் மண் உதிர்ந்து போயிடுச்சு.
திரும்ப பொரளுவோம்ல.. விட்டது பிடிச்சுடுவோம்.
அடுத்த பதிவில், இன்னும் நிறைய மணல் நம்ம Terminator Arnoldஆல் உதிர்ந்ததைச் சொல்றேன். ஹ்ம்!