நைனா, சௌக்கியமா? நான் ரொம்ப சௌக்யம்.
VoIP தொலைபேசி வீட்டில் போட்டதிலிருந்து, கிட்டத்தட்ட தெனம் தெனம் பேசிக்கிட்டுதான் இருக்கோம்.
அப்படி இருக்கும்போது, ஏன் இந்த மடல்? அதுவும், நீ படிக்காத என் பதிவுப் பக்கத்தில் எதுக்காக இந்த மடல்னு கேள்வி எனக்கே வருது.
ஆனா, மத்தவங்களை Y Y Yனு கை நீட்டி கேள்வி கேட்கும் போது, நம்ம முதுகும் ஒழுங்கா இருக்கான்னு பாத்துக்கணுங்கரது என் கொள்கை.
அந்தக் கொள்கையிலிருந்து தளராமல் இருக்க இந்தப் பதிவு.
(பெயர்காரணம் முடிஞ்சாச்சு, இனி மேட்டருக்கு போவோம்).
ரெண்டு வருஷத்துக்கு முன்ன வெகேஷனுக்கு வந்தப்ப, நம்ம தெரு ரொம்ப கலீஜா இருந்துச்சு. குண்டும் குழியும் தெரு முழுசும் இருந்துச்சு. ட்ரெயினேஜ் கட்டறேன்னு ஆறு வருஷத்துக்கு முன்னாடி வீட்டுக்கு 5000 வசூலிச்சு, அங்கங்க நோண்டி வச்சு, ரோட்டையே நாசம் பண்ணி வச்சிருந்தாங்க நம்ம கம்முனாட்டிப் பசங்க.
கேட்டா, ஸ்டே ஆர்டர், அது இதுன்னு நொண்டிச் சாக்கு.
சரி, அந்த கருமாந்திரம் எப்ப வேணா வந்துட்டுப் போகட்டும், தெருவை சுத்தமா வச்சு, ரெண்டு பக்கமும் மரத்தை நட்டு வைங்கைய்யான்னா, அதுக்கும் ஒருத்தரும் வரல்ல.
நான் உன்கிட்ட ரொம்ப எடுத்துச் சொல்லி, நீ மெனக்கெட்டு, நாலஞ்சு மரம் தெருவுல வச்ச. அதையும், சில ஒதவாக்கரைங்க, மரம் பெருசானா, வீடு இடிஞ்சு விழுந்துரும், குப்பை சேரும்னு, சில நாஸ்டார்டாமஸ் வகையராக்கள், நட்டு வச்சதை ராவோடு ராவா பிடுங்கிப் போட்டுட்டாங்கன்னு சொன்ன. அதுக்கப்பாலிக்கா, நான் எவ்ளோ சொல்லியும் நீ, எந்த ஷமூக ஷேவாவும் செய்ய மாட்டேன்னுட்ட.
சரி, ரோடு ஒரு பக்கம் குண்டும் குழியா இருக்கட்டும், தெருவுல மரம் கூட வேணாம்னு பல்ல கடிச்சுக்கிட்டு பொலம்பலை கொறைச்சேன். ஆனா, போன வருஷம் வெகேஷனுக்கு வந்தப்ப, தெரு ஓரத்துல, பெரிய காவா வெட்டி வுட்டுருந்தானுவ.
இன்னா நைனா இதுன்னு நான் கேட்டப்ப, மழ நீர் ஒழுகிக் போக, நம்ம கவுன்சிலர் கட்டி வுட்டுருக்கான்னு சொன்ன.
என்ன கொடுமைடா இது? மழ நீர கெணத்துல வுட சொல்லில்ல அம்புட்டு பேரும் கத்தரானுவ, இது இன்னான்னு கேட்டதுக்கு, உனக்கும் பதில் தெரீல, அந்த கவுன்சிலருக்கும் பதில் தெரீல.
மறு நாள், பொடி நடையா தெருவுல நடந்தா, மழ நீர் போவ கட்டியிருந்த காவாய்ல, எல்லாப் பயலும், சாக்கடையை அதில் வந்து கொட்டர மாதிரி அறிவுஜீவித்தனமா கட்டி வச்சிருந்தான். ஒரே கப்பு. வீட்டு வாசல்லையே, இப்படி திறந்த வெளி சாக்கடைய வச்சுக்கிட்டு, இந்த கப்புல எப்படிங்கடா வாழறீங்கன்னு ரெண்டு மூணு மாமாஸ் கிட்டையும் மாமீஸ் கிட்டையும் கேட்டேன். எல்லாம், ஈஈன்னு இளிச்சுட்டு எஸ்கேப் ஆயிட்டாங்க.
தெருவுலையே, சாக்கடைய அந்த 'மழை நீர் காவாயில்' விடாத வூடு நம்ம வீடும், நம்ம எதிர் வீட்டு மணி மாமா வீடும், எட்டாம் நம்பர் வர்கீஸ் வீடும் தான்.
இதுல பெரிய கொடுமை, நடு ராத்திரில, தெருமுனைல இருக்கர ஃப்ளாட் காரன், தன் 'மொத்த' ஸெப்டிக் டாங்க் கழிவையும், பம்ப் வச்சு, இதுல எடுத்து வுட்டுட்ரதுதான். இப்படி பண்றதால, அந்த புத்திசாலி மாசத்துக்கு சில ஆயிரங்களை மிச்சம் பிடிக்கறாராம்.
தெருவாழ், மத்த கேணயன்களும், இதை கேள்வி கேக்கரது கிடையாது.
இந்த ஐடியா நல்லாருக்கேன்னு, எல்லார் வீட்டிலும், நள்ளிரவில், இந்த ஐடியாவை அப்பப்ப அமுல் படுத்தி வந்தார்கள் என்பது, ராத்திரியில் வீசும் வாசத்திலிருந்தே நன்கு உணர முடிந்தது.
நம்ம ஊரு கவுன்சிலரே ஒரு உதவாக்கரை. ஆறு வருஷத்துக்கு மேலாகியும், ஒரு ரோட்டை போட வக்கில்லா கவுன்சிலரு. அவரை நம்பி ஒண்ணியும் ஆகப் போரதில்லைன்னு, நானே சில வீடுகளுக்கு போய், அங்க இருந்த மாமாஸ் கிட்டையும் மாமீஸ் கிட்டையும் போராடி, இப்படி எல்லாம் பண்ணாதீங்க, நம்மளுக்கு பின்னாளில் கேடுன்னு சொல்லி மாஞ்சு போயிட்டேன்.
பின்னாளை பத்தி எவன் கவலைப் படறான்? அவங்க் வீட்டுக்குள்ள சாக்கடை இல்லை, வெளீல தான் விட்டாச்சேன்னு, ஹாய்யா லைஃபை எஞ்சாய் பண்றானுங்க கெரகம் புடிச்சவனுங்க.
இந்த தபா ஊருக்கு வரப்போ எல்லாரையும் நாக்கப் புடிங்கிக்கர மாதிரி கேள்வி கேட்டு ஏதாவது புரட்சிகரமா பண்ணனும்னு நானும் பல திட்டம் தீட்டி வச்சிருந்தேன்.
(இணைய சக பதிவர் ரமேஷ் சதாசிவம் இப்படி ஒரு போராட்டம் நடத்தி கெலிக்க வேர செஞ்சுட்டாரு. அத்த படிச்சு புதுத் தெம்பு வந்திருக்கு)
ஆனா, என் ஐடியாக்கெல்லாம் ஆப்பு வெக்கர மாதிரி, நேத்து நம்ம வர்கீஸ் பையன் ஆன்லைன்'ல வந்து ஒரு மேட்டர சொன்னான் நைனா.
"அண்ணே, நேத்து, ஒங்க வீட்லையும் சாக்கடைய வெளீல இருக்கர காவாய்ல கொட்டர மாதிரி செஞ்சுட்டாங்கண்ணே"ன்னு ஒரு ஆட்டம் பாமை என் தலைல போட்டான்.
"டேய் மெய்யாதான் சொல்றியாடா, எங்க நைனா அப்படியெல்லாம் பண்ண மாட்டாரேடா"ன்னேன்.
அதுக்கு அவன் வெப்கேம்ரால கைய காட்டி, கற்பூரம் அணச்சு சத்தியம் வேர செஞ்சுட்டான்.
நைனா, ஏன் நைனா இப்படி நீயும், அந்த கெரகம் புடிச்சவனுங்க செஞ்ச மாதிரி செஞ்ச?
இனி, நான் எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு, அந்த கெரகம் புடிச்சவனுங்க கிட்ட போய் மல்லுக்கு நிப்பேன்?
சாக்கடைய இப்படி தொறந்த வெளீல ஓட விட்டா, கண்ட கண்ட நோய் எல்லாம் வரும்னு ஏன் யாருக்கும் தோணலை? ஸெப்டிக் டாங்க்ல விட்டு, அது ரொம்பும்போது, சில வருஷத்துக்கு ஒரு தபா ஒரு ஆயிரம் ரூவா செலவு செஞ்சு அதை எடுத்துக் கொட்டினா என்ன கொறஞ்சுடப் போவுது?
கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம, ஏன் இப்படி எல்லாரும் நடந்துக்கறீங்க?
ஒரு அடிப்படை சுத்த உணர்வு கூட இல்லாத காட்டுமிராண்டியா நம்ம ஊர்வாசிகள் மாறிக்கிட்ட்டே வராங்களே ஏன்?
Y நைனா Y Y Y?